வக்கீல் உள்பட 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தில் வக்கீல் உள்பட 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி பேட்டி
திருச்சி, மார்ச்.15-
திருச்சி மாவட்டத்தில் வக்கீல் உள்பட 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வக்கீல் ராஜேஷ்கண்ணா (வயது 35) என்பவர் குண்டர் சட்டத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சொத்து பிரச்சினை தொடர்பாக கே.கே.நகரில் வசித்து வந்த தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியை (60) கூலிப்படை ரவுடிகள் ரவிச்சந்திரன் (35), தணிசாசலம் (29), செல்வம் (27), குமார் (30), ராதாகிருஷ்ணன் (24) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 11.1.2009 அன்று பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கு, கள்ளக்காதலியான வித்யாவை அடைவதற்காக தனது நண்பரும், வித்யாவின் கணவருமான வெங்கடேசனை அதே கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற வழக்கு ஆகியவற்றில் கைதானவர். இந்த கூலிப்படையை சேர்ந்த ரவிச்சந்திரனும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் கடந்த 13.1.2009 அன்று பெரமங்கலத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றபோது சிறுமி சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைதான புலிவலத்தை சேர்ந்த செந்தில் (27) என்ற வாலிபரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இதுவரை 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிகள் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டத்தில் 747 பேர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை 538 பேர் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்.
திருச்சி மாநகர பகுதியில் 3 துப்பாக்கி கடைகள் உள்ளன. அவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டு அதற்கான ரசீதை பெற்று சம்மந்தபட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வாரம் தோறும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எல்லை பகுதிகளில் சோதனை
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப துணை ராணுவம், மத்திய பாதுகாப்பு படை ஆகியவற்றை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கான சோதனைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணை, பெரம்பலூர் மாவட்ட எல்லையான சிறுகனூர், கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை ஆகிய பகுதிகளில் அந்தந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து திருச்சி மாவட்ட போலீசார் வாகன சோதனை உள்பட அனைத்துவிதமான சோதனைகளையும் நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source :
http://www.dailythanthi.com/article.asp?NewsID=475080&disdate=3/15/2009&advt=2

0 comments:
Post a Comment